அஸ்ஸலாமு அழைக்கும்,
கேட்டதில் பிடித்தது.
ஷேய்க் முஹ்தஸீம் அல் ஹமீதி (Sheikh Moutasem Al Hameedi) அவர்களது Fully Engaged –
என்ற நிகழ்ச்சியிலிருந்து….
கேட்டதில் ஒரு துளி இதோ… அவர் இப்படி கூறினார்… (இந்த காட்சியை உங்கள் கற்பனையில் கொண்டு வாருங்கள்)
இது ஒரு உண்மை சம்பவம். 1980 களில், எனது நண்பர் ஒருவர் அவர் தாயாரிடம் இருந்து வெகு தூரத்தில் வேலை பார்த்து வந்தார். ஒவ்வொரு வாரமும், அவர் தன தாயாருக்கு கடிதம் அனுப்புவது வழக்கம்.
அவர் தாயார், அந்த கடிதத்தை போஸ்ட் ஆபீஸ் சென்று, எடுத்து வருவார். அந்த கடிதத்தை ஒவ்வொரு முறை பெறும்போதும், அதனை மூக்கினால் முகர்ந்து பார்த்து, ஒரு வித வாசத்தை உணர்வார். அது கடிதத்தின் வாசமல்ல, ஒரு பாசமிக்க தாய் உணரும் வாசம். பின்னர் அதனை முத்தமிடுவார். நெஞ்சோடு அனைத்து வைத்து வீடு வரை கொண்டு வருவார். அவருக்கு எழுத வாசிக்க தெரியாது. அதனால் வீடு வந்த பின், அவசர அவசரமாக தன் இளைய மகனிடம் கடிதத்தை கொடுத்து பல முறை படிக்க சொல்லி அளவிலா ஆனந்தம் படுவார். இது அவர் தன மகன் மீது வைத்திருக்கும் அளவிலா பாசத்தின் அடையாளம்.
அன்றும் அதே போல், கடிதம் வந்தது. அளவிலா சந்தோசம். முகர்ந்து பார்த்து, முத்தமிட்டு, நெஞ்சோடு அனைத்து, வீட்டுக்கு வேகமாக வருகிறார். வீட்டில் யாரும் இல்லை. சில மணி நேரம் காத்திருந்தும் இளைய மகன் வரவில்லை. இனம் புரியாத ஏக்கம். ஓடோடி பக்கத்து வீட்டுக்கு செல்கிறார். அங்கும் அதிலுள்ள செய்தியை வாசித்து சொல்ல யாரும் இல்லை. இனம் புரியாத கவலை. அழுகை தொண்டையை அடைக்கிறது. தனக்கான செய்தியை தன்னால் புரிய முடியவில்லையே என்ற ஏமாற்றம். அதுதான் அவரது கடைசி ஏமாற்றம். தான், தன மகன் மீது வைதிருந்த அளவு கடந்த அன்பால் ஓரிரு மாதங்களுக்குள், எழுத படிக்க பழகி விட்டார். அதற்கு பின் அவரே தன மகன் கடிதத்தின் சுவையை உணர ஆரம்பித்தார். அதெப்படி தன் 60 வயதிலும் இது முடிந்தது. அதுதான் அளவிலா அன்பின் மகிமை.
இன்று தொழுகையில் ஈடுபாடு இல்லை என்று சொல்லும் பலருக்கு குர்ஆனை முறையாக ஓத தெரியவில்லை, அதன் அர்த்தம் புரியவில்லை, அதன் செய்தி தெரியவில்லை. இவர்கள் அந்த தாயை விட தன் இறைவனை, இஸ்லாத்தை இன்னும் முழுமையாக விரும்ப ஆரம்பித்தால், முயற்சி செய்திருந்தால், அல்லாஹ் சில மாதங்களில் இவர்கள் முயற்சிக்கு உதவி புரிந்திருப்பான். ஆனால் பலர் இதற்கு முயற்சி செய்வதில்லை. அந்த தாயின் பாசத்தோடு, நீங்கள் இறைவன் மீது வைக்க வேண்டிய பாசத்தை சிந்தித்து பாருங்கள். தொழுகையில் கவனச் சிதரலை குறைத்து முழு ஈடுபாட்டை கொண்டு வர, குர்ஆனை பொருளரிந்து லயித்து ஒதுவது அவசியம். வெளியூர் வேலைக்காக இரண்டு மூன்று மாதங்களில் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளை கற்கும் உங்களுக்கு, ஏன் அரபும் தஜ்வீதும் உங்கள் வாழ் நாளில் கற்க முடியாது என்று கேட்டபோது..
வெட்கித் தலை குனிந்ததில் நானும் ஒருவன்..
மிக எளிய வடிவில் சிந்திக்க தூண்டிய அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.. ஆமீன்
இதை Sheikh Yawar Baig ஒரு ஆடியோவில் கூறும்பொது, அதிகாலை, இரவு தொழுகைகளில் சத்தமாக சூராஹ்க்கள் ஓதுவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு நாளும் காலையில் உங்களுக்கு தொழுகையில் கிடைக்கும் அறிவுரை முழு நாளும் உங்களுக்கு உதவும். அது இரவில் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்றார். நமக்கு தொழுகையில் கேட்கும் இந்த வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? சிந்திக்க வேண்டிய தருணம்.
வஸ்ஸலாம்
முஹம்மது சாதிக்
அபு அம்மாராஹ்
www.abuammaarah.com



