நாளை முதல் நோன்பு.
ஒரு ஏழை குடும்பத் தலைவன் பல்வேறு சிந்தனையோடு.
அவன் மனைவியோ, வீட்டின் வறுமையில் ஒவ்வொரு ஸஹரையும், இப்தாரையும் எப்படி கழிப்போம் என்று அங்கலாய்த்தவலாக.
சந்தோஷமான மாதத்திலும் ஷைத்தானின் ஊசலாட்டமோ என்னமோ பல வித கவலைகள்.
தண்ணீர் கூட இடையில் குடிக்க முடியாது என்பதால், கொஞ்சம் நல்ல உணவுகளை குழந்தைகளுக்கு ஸஹருக்கு கொடுக்க வேண்டுமே.
இப்தார் வேளையில் தம் குழந்தைகள் முகத்தில், நல்ல உணவை காட்டி கொஞ்சம் சிரிப்பை பார்க்க வேண்டுமே என்ற சராசரி பெற்றோரின் ஆசை.
வீட்டிலுள்ள அரிசி எவ்வளவு உள்ளதென தட்டுத் தடுமாறி பார்க்கும் தாயும், அவ்வப்போது இருக்கும் கொஞ்ச காசையும் , தடவிப் பார்த்து, வேறு ஏதும் வருமானம் தேட முடியுமா என சிந்திக்கும் நோயுற்ற முதிய தந்தையும்.
இலேசாக கதவு தட்டுகிறது. வாசலில் ஒரு உருவம். இதோ உங்களுக்காக இந்த ஹாஜியார் தந்தார் என ஒரு பாரமான பொட்டலத்தை கொடுத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மறைந்து விட்டார். ஒன்றும் புரியவில்லை.
மெதுவாக திறந்து பார்த்தால், உள்ளே ஒரு மாதத்திற்கு போதுமான அரிசி, சீனி, மாவு, ஈத்தம்பழம் என இன்னும் சில பொருட்கள். ஓடி வந்து பார்த்த மனைவிக்கு அதிர்ச்சியும் சந்தோசமும் ஏன் அழுகையும்தான். அல்லாஹ்வின் ரிஸ்க் இப்படியெல்லாமா வரும் என சுகூர் செய்து சுஜூதில் விழுந்து விட்டாள்.
ஒரு மாதத்தின் ஏழைக் குடும்பத்தின் முழு பாரமும், ஒரு செல்வந்தனின் ஒரு நாள் வருமானத்தின் சிறிய பகுதியில் கரைந்து ஓடி விட்டது. ஒரு நோன்பாளி, ஒரு நோன்பு பிடிக்க அல்லது நோன்பு திறக்க உதவினாலே, அளவிலா நன்மை தரும் இந்த மாதத்தில், முழு மாதமும், முழுக்குடும்பமும் நோன்பு பிடிக்கவும், நோன்பு திறக்கவும் உதவி செய்த அந்த செல்வந்தனின் நிலையை எண்ணிப் பார்த்தால், உள்ளம் புல்லரிக்கிறது.
சூறாவளியை விட வேகமாக, நபிகளார் உதவி செய்த ரமழான் மாததில், இந்த உதவி உண்மையில் சூறாவளி உதவிதான். காற்று வேகமாக கதவை தட்டி, வெளியே செல்வது போலத்தான் இந்த உதவியும்…..
ஒரு கணம்… சிந்தித்தால்….
அந்த ஹாஜியார் இடத்தில்… இந்த கட்டுரையை வாசிக்கும், உங்களை வைத்துப் பார்த்தால்…. அல்லாஹு அக்பர்…..
….. யார் அல்லாஹ்வுடைய உவப்பை நாடி உளப்பூர்வமாக தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களு(டைய தர்மத்து)க்கு உவமை, உயரமான பூமியிலுள்ள ஒரு தோட்டம் போன்றதாகும். அதில் பெருமழை பெய்யும் பொழுது தன்னுடைய கனிகளை அது இருமடங்காகத் தருகிறது. அப்படிப் பெரு மழை அதில் பெய்யவில்லை என்றாலும், இலேசான தூறல்கூட அதற்குப் போதுமானதாகும். நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 2:265)
வஸ்ஸலாம்
முஹம்மது சாதிக்
அபு அம்மாராஹ்
18-05-2017



