அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்று நம்மில் பலருக்கு முழுக் குர்ஆனை அல்லது குர்ஆனில் பல சூராக்களை மனனமிட ஆசை. ஆனால் பல நேரங்களில் நாம் இதை கஷ்டமாக நினைக்கிறோம்.
அண்மையில் படித்த “அல்குர்ஆனை மனனம் செய்வது எப்படி என்ற நூலில் கிடைத்த சாராம்சத்தை பலருக்கும் உதவும் என நினைத்து இங்கு பதிகிரேன். இன்ஷா அல்லாஹ், முடிந்தவரை தேவையான நல்ல விசயங்களை எடுத்து, அதை அமல் படுத்தி, எல்லோரும் பயன் பெறுவோம்.
அல்குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கு கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.
1. மனப் பரிசுத்தம்அவசியம் : இஹ்லாஸ் எனப்படும் மனத்தூய்மை அவசியம். தூய எண்ணம் உள்ளத்தில் இருக்க வேண்டும்.
2. சிறு வயதிலேயே ஆரம்பிப்பது மிகச் சிறந்தது. தவறியவர்கள், இப்போதிலிருந்து ஆரம்பிக்கலாம்.
3. தகுந்த நேரத்தை தெரிவு செய்ய வேண்டும்: அமைதியான நேரம் நல்லது. தஹஜ்ஜத் நேரம், சுப்ஹ், மக்ரிபுக்கு பின்னுள்ள நேரங்கள் சிறந்தது.
4. தகுந்த இடத்தை தெரிவு செய்ய வேண்டும் : பார்வை சிதறாத அமைதியான இடங்கள் நல்லது. மஸ்ஜித்கள் மிகச் சிறந்தது.
5. இறையச்சமுள்ள ஆசானை தெரிவு செய்யுங்கள்: இதன் மூலம் முறையாக கற்கலாம்.
6. குர்ஆன் பரிசுத்தமானது, அதனால் எந்நேரமும் சுத்தமாகவும் வுழூ உடனும் இருப்பது நல்லது.
7. மிஸ்வாக்கின் சுன்னத்தை கடை பிடித்தல்: இது வாய் சுத்தத்தோடு தொடர்புடையது.
8. முதலில் தஜ்வீத் கற்றல்: பின்னர் மனனம் செய்யும்போது விரைவாக மனனம் செய்ய முடிவதுடன் ஓதலில் அழகும் வரும்.
9. ஒரே குர்ஆன் பிரதியை பயன்படுத்தல். இது இலகுவாக உரிய பக்கத்தை நம் கண் முன் கொண்டுவரும். 20 பக்கம் ஓர் ஜூஸ் உள்ள குரான்கள் நல்லது. இதில் புதுப் பக்கத்தில் ஆயத் ஆரம்பமாகும். ஒவ்வொரு பக்கத்திலும் ஆயத் முடியும்.
10. ஓரளவு சத்தத்தை உயர்த்தி ஓதி மனனம் செய்வது நல்லது. குர்ஆன் ஓதும் இசை நமக்கு கேட்கும்.
11. மனனம் செய்யும்போது முதலில் எழுத்துக்களை பார்த்து பல முறை ஓத வேண்டும். பின்னர் பார்க்காமல் மனனம் செய்யலாம்.
12. வசனத்துக்கு வசனம் தொடர்பு படுத்தி மனனம் செய்ய வேண்டும். உதாரணமாக முதலில் தனியான வசனம் , பின் முதல் இரண்டு வசனம், பின் இரண்டாம் மூன்றாம் வசனம், ETC
13. அத்தியாயங்கள், ஜூஸ்உகளின் ஆரம்ப, இறுதி வசனங்களை மனதில் பதிய வையுங்கள்.
14. விரைவாக ஒதாதீர்கள். நிறுத்தி நிதானமாக மனனம் செய்யுங்கள்.
15. வசங்களின் பொருளை ஓரளவு அறிய முற்படுங்கள். இது மனனத்தை இன்னும் ஆழமாக பதிய செய்யும்.
16. மனனமிட்டவைகளை மௌனமாகவும், சப்தமாகவும் திரும்ப திரும்ப மீட்டி ஓதுங்கள். நன்றாக மனனம் செய்தவற்றை அடிக்கடி தொழுகைகளில் ஓதுங்கள்.
17. மனனமிட்டதை நன்றாக உறுதிப் படுத்திய பின், புதிய பகுதியை மனனமிட ஆரம்பியுங்கள்.
18. அல்லாஹ்வின் பக்கம் துஆ, திக்ர், உதவியைப் பெறுவதிலும் தேவை உடையவராக ஆகுங்கள்.
19. பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். பாவங்கள் இல்மை மறக்கடிக்கும்.
20. தினமும் சற்று ஓய்வு அவசியம். முழு நேரமும் மனனமிட செலவழிக்காதீர்கள்.
21. தினமும் குறிப்பிட்டளவு பகுதியை அல்குர்ஆனிலிருந்து ஓதும் பழக்கத்தை கடை பிடியுங்கள்.
22. ஒழுங்கான முறையில் மீட்டி வாருங்கள். நீங்கள் ஓதி இன்னொருவரை சரி பார்க்க சொல்லலாம்.
23. ஒரே மாதிரியான வசனங்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம். இவற்றை எழுதி வைத்து அதன் மீது கவனம் செலுத்தலாம். உதாரணம் 7:78 உம் 11:67 உம.
24. முழுவதையும் மனனமிட்டோர் முழுக் குர்ஆனையும் மீட்டி ஓத வேண்டும். இடைக்கிடையே உஸ்தாத், நண்பர்களிடம் பாடம் கொடுப்பது.
25. மனம் செய்தவற்றை, பொருளறிந்து அதனை உங்கள் அமலில் உங்கள் வாழ்கையில் கொண்டு வாருங்கள்.
இன்ஷா அல்லாஹ், பயனுள்ள தகவல் என நினைக்கிறேன். அல்லாஹ் நம் முயற்சிகளை வெற்றி ஆக்குவானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்.
சாராம்சம்
அபு அம்மாராஹ் (முஹம்மது சாதிக்)



